Monday, September 16, 2019

பதினான்காம் நாளின் வாசிப்பனுபவம் (15.09.2019)




அழகியசிங்கர்




டொரினா என்ற தலைப்பில் உள்ள கதை.  வசந்தா அக்கா தற்கொலை செய்து விட்டாள் என்ற செய்தியில் ஆரம்பிக்கிறது கதை.  வசந்தா அக்காவைப் பற்றி நினைவுகளில் ஆரம்பித்து முடிவும் அதேபோல் முடிகிறது.  இந்தக் கதையே வசந்தா அக்காவின் தற்கொலைதான்.  வேற வழியே இல்லை.  கதிரேசன் அண்ணனுடன் நடக்க வேண்டிய கல்யாணம் தவறிப்போய்விடுகிறது.  அதைப் பற்றியே நினைத்து நினைத்து வசந்தா அக்கா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.  
திறமையாக எழுதப்பட்ட உளவியல் கதை.  வசந்தா அக்கா என்ற கதாபாத்திரத்தில் ஏற்றப்பட்டுள்ள சோகம் படிப்பவரைத் திகைக்க வைக்கிறது.  ஆனால் இந்தத் தற்கொலை முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யயகிரகணம் என்ற கதையைப் படிக்கும்போது, இவர் கதைகளில் பொதுவான அம்சமாக நிறைவேறாத ஆசை அடிநாதமாக ஒலிக்கத் தொடங்குவதுபோல் தோன்றுகிறது.  பெண் பார்த்துவிட்டுப் போகிறான்.  அந்தப் பெண்ணிற்கும் இவனுக்கும் வயது வித்தியாசம் அதிகம்.  ஒருவாரம் கழித்துச் சொல்வதாகக் கூறிய பெண் வீட்டார்.  பதில் சொல்லவில்லை.  என்ன என்று கேட்டுவிடலாமென்று இவன் போகிறான். ஒரு காரணத்தைச் சொல்லி பெண் இப்போது தயாராய் இல்லை என்று பெண்ணின் அப்பா சொல்கிறார்.  பெண் சம்பந்தமாய் அவன் இளமைக்காலத்து நினைவுகள் உடனே.  சுஜாதா என்ற பெண் வருகிறாள். அவளைக் காதலிக்கிறான்.  
ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.  üஅப்போது இரண்டு கறுப்பு வெள்ளைப் பட்டாம்பூச்சி அவள் கண்களிலும், பல வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் என் வயிற்றிலும் பறந்தன.ý 
இந்த இடத்தில் இதைப் படிக்கும்போது கதையின் போக்கு புரிந்து விடுகிறது. 
அவள் கண்களில் காதலை உணர்ந்த ஒருநாளில் அவளிடம் காதல் கடிதத்தை நீட்டுகிறான்.  பெரிய அதிர்ச்சியைக் காட்டாமல் நிலக்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து வாசிக்கும் ஒரு சாவதானத்துடன் அக் கடிதத்தை வாசிக்கிறாள்.  பின் அவன் கண்களைப் பார்த்து, 'உன் கண்கள் ரொம்ப அழகு,' என்று சொல்கிறாள். 
விலைமகளைத் தேடிப் போகிறான்.  அவன் நினைக்கிறதை நடத்த முடியவில்லை.  "கோபப்படும்போது கூட உன் கண்ணு அழகய்யா," என்கிறாள்.  கோபத்துடன் அவளைப் பார்த்து, 'போடி தேவடியா.' என்கிறான்.
இந்தக் கதையில் யயகிரகணம் என்றால் என்னவென்று புரியவில்லை. 
லிண்டா தாமஸ் என்ற கதையில் ஒரு நிறுவனத்தில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் லிண்டா தாமஸ் என்ற பெண் பணியாளரைப் பற்றிய கதை.  அலுவல் விஷயமாகப் பேசும்போது வேற எதுவும் பேசாத ரொம்ப கறார் பேர்வழியாக இருப்பவர், சித்துவுடன் பேசும்போது கொஞ்சம் இலகுவாக மாறிவிடுகிறா. 17 ஆண்டுகளாக அனுபவமுள்ளவர் வேலையைவிட்டு விலகி விடுகிறார். அவரே விலகவில்லை நிறுவனம் அவரை நீக்கி விடுகிறது.  அதற்குக் காரணம் சித்துதான்.  ஐடி நிறுவனங்களில் உள்ள குழப்பத்தைத் திறமையாக எழுதி உள்ளார்.  
ஒரு காதல், மூன்று கடிதங்கள் என்ற கதை விவாகரத்தைப் பற்றிப் பேசுகிறது.  மனைவியுடன் வாழ விரும்பாத கணவன், ஜாக் என்ற ஆண் நண்பனுடன் அமெரிக்காவில் வாழ விரும்புகிறான்.  இந்தக் கதையின் போக்கு பின் குறிப்பு மூலம்தான் தெரிகிறது. 
வழிப்போக்கன் என்ற கதையில் இரண்டு பேர்களுக்காக வீடு வாடகைக்குத் தேடித் தர முன்பின் தெரியாத ஒருவன் உதவுகிறான்.  மூன்று பேர்களும் வேற வேற மொழி பேசுகிறவர்கள்.  கடைசியில் வீடு கண்டுபிடித்துக் கொடுத்து விடுகிறான்.  அதற்காக உதவி செய்ய வருபவன் எந்தவித பண உதவியையும் வாங்காமல் போய் விடுகிறான். அவன் பெயர் கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மொத்தத்தில் கார்த்திக் பாலசுப்ரமணியன் திறமையாகக் கதை எழுதுபவராகத் தெரிய வருகிறார்.  

No comments:

Post a Comment