Sunday, September 15, 2019

பதின்மூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (14.09.2019)



அழகியசிங்கர்





இந்த முறை சிறுகதைத் தொகுப்பு. கார்த்திக் பாலசுப்ரமணியன் என்ற இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு.  தொகுப்பின் பெயர்  டொரினா.
சி சு செல்லப்பா ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் சிறுகதைகளைக் குறிப்பிட்டு (முன் கதைச் சுருக்கம் மாதிரி) கதைகளைப் பற்றியும் எதாவது சொல்லியிருப்பார்.
ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு புத்தகத்திலேயே கதையின் முடிவில் குறிப்புகள் எழுதி உள்ளேன். 
போன ஆண்டு மார்ச்சு மாதம் இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன்.  ஒரு வருடத்தில் எல்லாம் மறந்து விட்டது.  திரும்பவும் படித்தபின்தான் ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. 
முடிந்தவரை சிசு செல்லப்பா பாணியில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.
இரு கோப்பைகள் என்ற முதல் கதை.  வயதானவர்கள் பற்றிய கதை.  இப்படியெல்லாம் சம்பவம் எதிர்பாராமல் நடக்கும். நடக்கிறது. மார்க்கும், சோஃபியாவும் வயதான கணவன் மனைவி.  இருவரும் பக்கத்தில் உள்ள குடியிருப்பில் இருக்கிறார்கள்.  நடைப்பயிற்சி செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி விடுகிறார்கள்.  சோஃபியா கொஞ்சம் களைப்பாக இருக்கிறதென்று படுத்துக்கொள்கிறார்.  திரும்பவும் எழுந்து கொள்ளவில்லை.  
நான் எழுதிய குறிப்பு : கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை இக் கதை தவிர்த்து விடுகிறது. முதியவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சோக சம்பவங்களை அப்பட்டமாகச் சொல்லாமல் சொல்கிறார்.  கதையின் முடிவு இயல்பாக உள்ளது. ஆனால் இன்னொரு கோப்பை ஏன்?

2. முடிச்சுகள்.. குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கிளம்புகிறான்.  அவன் ஒரு வேலையில் சேர்வதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சியைத் துவங்குகிறான்.  அப்படி ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி பேராசிரியர் ஜோஷி ஆணையிடுகிறார். அப்பாவை வழித் தாத்தாவைப் பற்றி விபரம் சேகரிக்கப் போகிறான்.  அப்பாவின் அப்பா - தாத்தா -  ஒரு காரணமும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போய்விடுகிறார்.  அவரைப் பற்றிப் பல தகவல்களைச் சேகரிக்கிறான்.  இறுதியில் சோழிச் சித்தரைப் பார்க்கிறான்..
கதை முடிவில்தான் புதிர் அவிழ்கிறது.  சோழிச் சித்தராக அவர் தாத்தா மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.  படிப்பவர்கள் முடிவை யோசிக்க முடியாத கதை.

3. பார்வை - பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு நானூறு கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தன் பெண்ணைப் பற்றி கவலை ஏற்படுகிறது.  அம்மா பார்த்துக் கொள்கிறாள். இருந்தாலும் குழந்தைக்கு சுரம். உடனே போய்ப் பார்க்க முடியாத அவஸ்தை.  வேலை கெடுபிடி. இப்படி ஆரம்பிக்கிறது கதை. உதவி இயக்குநராக இருக்கும் தன் கணவனின் கனவை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்.   கொஞ்சம் சீக்கிரமாக வீட்டிற்குப் போக வேண்டுமென்று பேருந்தில் வருகிறாள்.  500 ரூபாய் நோட்டிற்கு சில்லரைத் தர முடியவில்லை நடத்தினரால்.  ஏதோதோ பேசுகிறான்.  அதைக் கேட்கப் பிடிக்காமல் வேற வழியில்லாமல் துக்கத்தைத் தாங்க முடியாமல்  பஸ்ஸில் எல்லோர் முன்னும் அழுகிறாள்.  அழுகை ஒரு வடிகால் என்பதுபோல் எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்டு போன விதம் நன்றாக உள்ளது. 
.இத் தொகுப்பில் உள்ள இன்னும் சில கதைகளைப் பற்றி நாளை எழுதுகிறேன்.   



1 comment:

  1. எழுத்தாளர் திரு. வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் இருந்த இந்த நான்கு சிறுகதைகளை வாசித்தேன்.

    பெண்கள் முக்கியமான கதாபாத்திரங்களாக இவர் கதைகளில் வலம் வருகிறார்கள். கதாபாத்திரங்கள் ஆழமான மன உணர்வுகளை வெளிப்படுத்துவதால் நாம் சற்றே நிதானித்துப் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் கதையின் முடிவு என்று இல்லாமல், நம்மைசிந்தனைகளுக்கு இட்டுச் சென்று நாம் நமக்கு ஏற்றவாறு முடிவைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது போலும் தோன்றுகிறது.

    ‘துன்பக்கேணி’ - மலைச்சியின் கணவன் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் அவள் அனாதை ஆகிவிடுகிறாள். வேறு வழியில்லாமல் கிட்ணத் தேவரின் சாராயம் காய்ச்சும் குரூப்பில் சேருகிறாள். வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிற்கும் அவளைப் பார்த்து பரிதாபப் பட்டு பண உதவி செய்து நாளை முதல் இந்த வேலைக்கு வராதே, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் சரக்கை இன்னொரு ஊருக்கு எடுத்துச் செல்லுன்போது அவளும், அவளுடன் இருந்த இரண்டு பேரும் போலிசில் பிடிபட்டு விடுகிறார்கள்.

    ‘கடல் புரத்தில்’ - கிறிஸ்தவப் பண்டிகையான அறுப்பின் பண்டிகையை ஊர் கோலாகலாமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பிலோமி மட்டும் மிகுந்த சோகத்தில் வீட்டிற்குள் இருக்கிறாள். போன வருடத்தில் இதே சமயத்தில் சாமிதாஸூடன் நெருக்கமாக தனிமையில் இருந்த கணங்களையும், அந்த காதல் நிறைவேறாமல் போனதையும் நினைத்து அழுகிறாள். அவளது அப்பா, அவளது அம்மாவையும் ஒரு வாத்தியாரையும் இணைத்து தவறாக ஏதோ சொல்லிப் புலம்புகிறார். பிலோமியும் ஒரு வாத்தியார் வீட்டிற்கு சென்று இரவு வெகுநேரம் வரை அவர் வீட்டில் தங்கியிருக்கிறாள். அவருடன் பழகுவது பிலோமிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள்.

    ‘மழைப் பயணம்’ - பேச்சியப்பனின் ஏழைத் தங்கச்சியின் கணவன் சரியாக சம்பாதிப்பது இல்லை. அதனால் அவளே இட்லி சுட்டு விற்று சம்பாதித்து தன் இரு மகள்களையும், அம்மாவையும் காப்பாற்றுகிறாள். தாத்தாவின் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டதில் அவளுக்கு சொற்ப வருமானம் கிடைக்கிறது. இதைப் பொறுக்காத பேச்சியப்பனின் மனைவி மாமியாரை கூட்டிக் கொண்டு வந்து இவர்கள் வீட்டில் வைக்கச் சொல்லுகிறாள். இவர்கள் வசதியாக வாழ்ந்தாலும், அந்த வீட்டின் வாடகை வேண்டும் என்பதற்காக உங்கள் அம்மா இங்கே இருக்கவேண்டும் என்கிறாள். மழை நாளில் அருகில் இருக்கும் தங்கையைத் தேடிச் செல்கிறான் அண்ணன். திண்ணையில் இருந்து தங்கையின் மகள் வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். அவனது அம்மா, இருட்டு அறையில் உட்கார்ந்திருக்கிறாள். அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு, எதுவும் கேட்காமல் உடனே தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான்.

    ‘ எஸ்தர்’ - ஊரில் மழை, தண்ணி இல்லாமல் பஞ்சம் ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்கள். எஸ்தர் சித்தி குடும்பமும், இன்னும் சில குடும்பம் மட்டுமே அங்கே இருக்கின்றனர். எஸ்தர் சித்தி, அகஸ்டின், டேவிட், ஈசாக் ஆகிய மூவரின் தந்தைக்கு ஒன்றுவிட்ட உறவு முறை. அகஸ்டினுக்கும், டேவிட்டிற்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர். எஸ்தர் சித்திதான் அந்த குடும்பத்தில் எல்லாமுமாக இருக்கிறாள். திருமணமாகத ஈசாக்கிற்கும், எஸ்தர் சித்திக்கும் ஓர் ஈர்ப்பு இருப்பது போல் காட்டப்படுகிறது. வயதான பாட்டியையும் ,ஈசாக்கையும் அந்த ஊரில் விட்டு விட்டு இவர்கள் கிளம்பிப் போவதாக ஏற்பாடு. கிளைமாக்சில் பாட்டு இறந்து விடுகிறாள்.

    ReplyDelete